Wednesday, 4 May 2011

"சோளக்கதிர்!"

        (சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்பு நான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த பொழுது நடந்த சம்பவம்)


            சம்பவத்தின் பொழுது மதுரைக்கருகில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்துச் செல்வதாக சர்குலர் ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்தது. அதை ஆசிரியர் வாசித்துக் காட்டி, ஒரு குறிப்பிட்ட தொகையை மறுநாள் பள்ளி வரும் பொழுது தவறாமல் கொண்டு வர வேண்டுமென்று கூறினார். அப்பொழுது நாங்கள் அனைவரும் அடைந்த மகிழ்ச்சியை கூறவும் வேண்டுமா!

                           
              அன்று சாயந்திரம் வீட்டிற்குச் சென்றதும்,பாட்டி செய்து வைத்திருந்த சுக்குக் களி மற்றும் முறுக்கைச் சுவைத்தவாறு , பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்துச் செல்லும் விஷயத்தைப் பாட்டியிடம் கூறினேன்.( பாட்டியின் வளர்ப்பில் இருந்தேன் ). அவரும் பச்சைக் கொடி காட்டவே , மறுநாள் பள்ளி  சென்றதும், முதல் வேலையாக வகுப்பாசிரியரிடம் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன்.


                ஒரு நாள் சுற்றுலாவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில், வைகை அணை, அழகர் கோவில் , மஹால் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இருந்தனர்.

               சுற்றுலாவிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்த பிறகு , பக்கத்து வீட்டிலுள்ள தோழிகள் அனைவரும் சேர்ந்து அளவளாவினோம்.முதல் நாள் இரவு தூக்கமே வரவில்லை. ஒரு வழியாக என்னையறியாமல் தூங்கி விட்டேன்.

               சுற்றுலா செல்லும் நாளும் வந்தது. காலையில் எழுந்து, சிறிய பையுடன்  தோழிகளுடன் பள்ளிக்குக்  கிளம்பினேன். பள்ளியில் காலை வழிபாடு முடிந்தவுடன், தலைமை ஆசிரியர் ஒவ்வொருவர் பெயராக வாசிக்க, அவர்கள் சென்று வேனில் ஏறி அமர்ந்தனர்.
      

                வேனில் ஏறியதும் , யார் ஜன்னலருகில் உள்ள இருக்கையில் அமர்வது என்பதில் போட்டி ஏற்பட்டது. ஒரு வழியாக அனைவரும் ஏறி அமர்ந்ததும் வேன் புறப்பட்டது. அனைத்து  இடங்களைப் பார்த்தபின் இறுதியில்,பல்வேறு ஆரவாரங்களுக்கிடையில் வேன் அழகர் மலையை அடைந்தது.


                என் வாழ்கையில் அவ்வளவு குரங்குகளைப் பார்ப்பது அது தான் முதல் முறை. அதற்கு முன், அவைகளைப் பற்றி பாட்டி சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவை என் கவனத்தைக் கவர்ந்தன. என் தோழி கையில் வைத்திருந்த வாழைப் பழத்தைக் குரங்கு ஒன்று பறித்துக் கொண்டு ஓடி விட்டது. அவள் "ஐயோ! அம்மா !" என்று அரற்றியவாறு இருந்தாள். 
               
                எனக்கும் பயம் வந்து விடவே, குரங்கு என்னருகில் வரும் முன்னே கையில் வைத்திருந்த வாழைப் பழத்தைக் கீழே போட்டு விட்டேன். பின்பு, நாங்கள் அனைவரும் ஓடிப் பிடித்து விளையாடினோம். அங்கு விற்கும் வித, விதமான பொருட்களைப்(பாசி, வளையல், பொம்மை ) பார்வையிட்டோம். சிலர் சில பொருட்களை வாங்கினர்.

         
             இறுதியில் நாங்கள் ஆளுக்கொரு "சோளக் கதிர்"(அவித்த மக்காசோளம் ) வாங்கிச் சுவைத்தவாறு பேசிக் கொண்டிருந்தோம். அனைவரும் தின்று முடித்து விட்டனர் என்னைத் தவிர. நான் பாதி மட்டுமே தின்று தீர்த்திருந்தேன்.

            அப்பொழுது என்னருகில் ஒரு பிச்சைக் காரச் சிறுமி வந்து, "அக்கா! எனக்கும் கொஞ்சம் சோளக் கதிர் கொடுங்க!" என்று கெஞ்சினாள்.


          அதற்கு நான் "ம்! போ! நா எச்சி வச்சிட்டேன் !தர மாட்டேன்!" என்று கூறினேன்.(ஒரு வேளை, அந்தச் சோளத்தின் சுவை என்னைக் கவர்ந்தது போலும்!) என் தோழியும் கொஞ்சம் கொடுக்குமாறு கூறினாள். ஆனால் , நான் தரவில்லை. இறுதியில் அங்கிருந்து புறப்படும் நேரம் வந்தது. அனைவரும் அவ்விடத்தை விட்டு அகலவே , நாங்களும் சென்று வேனில் ஏறி அமர்ந்தோம். "வேன் புறப்படும் வரை அந்தச் சிறுமி என்னைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்."


             அந்த நாள் எனக்கு எதுவுமே தோன்றவில்லை. ஆனால் , எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து , இன்று  வரை சோளக் கதிரைப் பார்த்தாலே "அச்சிறுமியின் முகம் தான் என் நினைவுக்கு வருகிறது!".


            பல நேரங்களில் குற்ற உணர்ச்சி என்னை வாட்டுகிறது.! அறியாப் பருவத்தில் நடந்தது தான்.! ஆனால்,"ஏனோ என் மனம் அதை ஏற்க மறுக்கிறது!!"
  

Tuesday, 3 May 2011

"கசப்பான அனுபவம்"

              இச்சம்பவம் நடந்த பொழுது  சென்னைக்கருகிலுள்ள  ஒரு பல்கலைக் கழகத்தில் கணினி முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று கொண்டிருந்தேன். அங்கு பரவலாக எல்லா மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி கற்பார்கள். குறிப்பாக ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலிருந்து வந்து கற்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.


                   அச்சமயம் இரண்டாம் வருட இன்டெர்னல் தேர்வுகள் முடிந்திருந்தது. தோழிகள் அனைவரும் வார விடுமுறையைக் கழிக்க , பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து கொண்டிருந்தனர்.(மகாபலிபுரம், திருத்தணி ,சென்னை மற்றும் சில கோவில்களுக்கு). என் சொந்த ஊர் மதுரை என்பதால் நான் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஹோம் சிக் அதிகம் என்பதால் மாதம்  ஒன்றிரண்டு  முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.எனவே நான் அவர்களுடன் செல்லாமல் , வீட்டிற்குச் செல்வதற்காக  என் சாமான்களைப் பேக் செய்து கொண்டிருந்தேன்.


                கல்லூரி விடுதியிலிருந்து பேருந்து நிலையம் ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. அங்கிருந்து  பேருந்து வசதி எதுவும் அவ்வளவாகக் கிடையாது. எப்பொழுதாவது "அத்தி பூத்தது போல" ஒரு மினி பஸ் பெரும் இரைச்சலுடன் வரும்.எனவே விடுதியில் உள்ள அனைவரும் ஆட்டோ வில் தான் பேருந்து நிலையம் செல்வது வழக்கம் . அன்று வழக்கமாகச் செல்லும் ஆடோக்காரருக்குப்   போன் செய்தால் , அவர் வேறு ஒரு சவாரியிலிருந்தார். எனவே விடுதிக் காப்பாளரிடம் வேறு ஒருவரின் மொபைல் எண்ணைப் பெற்று , அவரிடம் சரியாகப் பத்து நிமிடங்களில் விடுதி வாசலில் வந்து நிற்குமாறு கூறினேன்.


           அப்பொழுது அந்தி மாலை ஏறத்தாழ ஆறு மணி இருக்கும். தோழிகளிடம் விடை பெற்று , வாசலில் நின்ற ஆட்டோ வில் ஏறினேன்.போகும் வழி நெடுகிலும் முட்புதர்களும், கருவேல மரங்களும், ஆங்காங்கே சிறு, சிறு  குடிசைகளும், ஒரு துர்க்கை அம்மன் கோவிலும் உள்ளது.  அவற்றைப் பார்த்து ரசித்தவாறே சென்று கொண்டிருக்கும் பொழுது , நடு வழியில் ஆடோக்காரர் வண்டியை நிறுத்தினார். எனக்குப் "பகீர்" என்றது.  "அண்ணே! எதுக்கு வண்டியை நிறுத்தினீங்க ?" என்று கேட்டேன். அச்சமயம் இருள் கவ்வத் தொடங்கி இருந்ததால், என் இதயம் பட, படவென்று அடிக்கத் தொடங்கியது.


               "உண்மையச் சொல்லு ! இரண்டு நாள் முன்னாடி ராத்திரி நீ தான போன் பண்ண ?" என்று மிரட்டும் தொனியில்  கேட்டார்.

              "என்ன சொல்றீங்க? இன்னிக்கு சாயந்திரம் தான் எனக்கு உங்க நம்பரே தெரியும். அதுவும் வழக்கமா போறவர் வேற சவாரியிலிருந்ததால் , வார்டன் கிட்ட கேட்டு உங்க நம்பர வாங்கினேன்!" என்றேன்.


             உரையடல்களின்னூடே  அவரின் தோழர்களுக்குப் போன் செய்து "மச்சி! ஒடனே  கோயிலாண்ட வாங்கடா! போன் பண்ண பொண்ணு மாட்டிகிச்சி!" என்றவாறு போன் இணைப்பைத் துண்டித்தார்.

        "எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நாலைந்து பேர் கையில் உருட்டுக் கட்டைகளுடன், பைக்கில் வந்து இறங்கி , ஆடோவைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த லுங்கியும், அழுக்குச் சட்டையும் வைத்துப் பார்த்த பொழுது, அவர்கள் அங்குள்ள சேரியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.


          எனக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும் , முகத்தில் வெளிக்காட்டாதவாறு, வார்த்தையைத் திடப்படுத்திக்கொண்டு , "யாரு நீங்க? எதுக்கு இப்படி வந்து சுத்தி நிக்கிறீங்க ? உங்களுக்கு என்ன வேணும் ?"  என்றேன்.

        "நீ யாரு? நீ  தானே ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்களுக்கு ராத்திரி போன் பண்ண ? சொல்லு !" என்றனர். அதற்கு நான் அருகிலுள்ள பல்கலை கழகத்தில் படிக்கும் விபரங்களையும் மற்றும் கல்லூரி ஐடி கார்டையும் எடுத்துக் காண்பித்ததோடு எனக்கும் , கால் செய்ததாக சொல்லப்படும் பெண்ணிற்கும் எந்தத் தொடர்புமில்லை" என்று கூறி என் உண்மை நிலையை விளக்கினேன்.
  

       கடவுள் அருளால் அவர்கள் என் நிலையைப் புரிந்து கொண்டு, "தங்களுக்கு இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஒரு மாணவர் கால் செய்து,பெண்கள் விடுதியில் ஒரு மாணவியைப் பாம்பு கடித்து விட்டதாகவும் , அதற்கு அவசரமாக ஆட்டோ தேவைப் படுவதாகவும்" கூறி உள்ளார். உடனே அந்த ஆட்டோ காரரும், அவரின் நண்பர்களையும் (உருட்டுக் கட்டைகளுடன் வந்தவர்கள் ) அழைத்து பதறியடித்துக்கொண்டு விடுதிக்குச் சென்றுள்ளனர். விடுதி வாட்ச் மேனிடம் கேட்டதற்கு , "அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை " என்றும் யாரோ தவறான தகவல் தந்துள்ளனர் என்று கூறி உள்ளார். அதிலிருந்து தொடர்ந்து அந்த மாதிரியான, அழைப்புகள்(பாம்பு கடித்தது, விஷம் குடித்தது, ஷாக் அடித்தது ) வந்து கொண்டிருப்பதாகவும் கூறி முடித்தார்.

       எனக்கு சில நிமிடங்களில் தலை சுற்றி விடும் போலிருந்தது. " இவ்வாறு கூட மாணவர்கள் செய்வார்களா?" என்று!


      பிறகென்ன சுற்றியிருப்பவர்கள் அகல , "கனத்த இதயத்துடன் பேருந்து நிலையம் சென்று சேர்ந்தேன்!"

"கிளி ஜோசியம்"

          சில வருடங்களுக்கு முன்பு, மதுரையிலுள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு பயின்று கொண்டிருந்தேன்.  தினமும் கல்லூரிக்கு வீட்டிலிருந்து சென்று வருவது வழக்கம். அன்று விடுமுறை தினம் என்பதால் , நானும் தம்பியும் வீட்டிலிருந்தோம். பெற்றோர் காய்கறி வாங்க அருகிலுள்ள உழவர் சந்தைக்குச் சென்றிருந்தனர்.


        காலையில் மெதுவாக எழுந்து, பல் துலக்கி, கையில் சூடான                 காபியுடன் தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தம்பி யோகா செய்து முடித்து விட்டு, தரையில் உயிரற்ற நிலையில் இருந்தான்(ஒரு வித ஆசன நிலை). 

        மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது."ஜோசியம்!கிளி ஜோசியம்!","ஜோசியம்!கிளி ஜோசியம்!" என்ற குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. நாங்கள் வசிக்கும் தெருவிலுள்ளவர்கள், ஓரளவு வசதி படைத்தவர்கள். எனவே, அவர்கள் யாவரும் தெருவில் விற்க வரும் யாரையும் சட்டை செய்வதில்லை. சில, பல நேரங்களில் "நானும்" கூட.


                 அன்று எனக்கு "இன்று  கிளி ஜோசியம் பார்த்து விட வேண்டும்!" என்ற அவா பீறிட்டுக் கொண்டு எழுந்தது. என் விருப்பத்தை தம்பியிடம் தெரிவித்தேன். அவன் சம்மதம் தெரிவித்த பின்பு, நான் ஜோசியரை வீட்டிற்குள் அழைத்து , வரவேற்பறையின் கீழே அமர வைத்து , நாங்களும் அருகில் அமர்ந்தோம்.


          அவர் கொண்டு வந்திருந்த துணியை கீழே பரப்பி, அதில் ராசி சீட்டுக்கட்டுகளை அடுக்கினர். பின்பு, கூண்டுக்கிளியை வெளியே திறந்து, "அம்மாடி! இந்த மகாராசிக்கு ஒரு ராசியான சீட்ட எடுத்துக் கொடும்மா!" என்றார்.

        கிளியும் கூண்டைத் திறந்த மகிழ்ச்சியில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தவாறு, வெளியில் வந்து அடுக்கி வைத்திருந்த சீட்டுக் கட்டிலிருந்து எனக்கான ஒரு ராசி(?) சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு ,பின் கூண்டிற்குள் சென்று விட்டது.


                   கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் ஒரு நாகப் படம் வந்தது. அதிலிருந்து அவர் "அம்மா!" உனக்கு சர்ப்ப தோசம் உள்ளது. எதோ ஒரு கர்ப்பிணிக்கு கழிச்சிப் போட்டத, தெரியாம நீ மிதிச்சுட்ட!" எனவே அதற்கு உடனடியா நீ பரிகாரம் பண்ணனும்!" என்றார். (நான் வசிப்பது நகரம். அவர் சொல்வது மாதிரி யாரும் சுத்திப் போட்டதை நான் பார்த்தது கிடையாது).

             எனக்கு ஓரளவு வருத்தமாக இருந்தது என்பதை என் முகம் பிரதிபலித்தது போலும்! என் முகக் குறிப்பை அறிந்து கொண்ட ஜோசியர் , உன்னோட மன திருப்திக்கு வேண்டுமானால், இன்னுமொரு முறை சீட்டை எடுத்துப் பார்க்கலாம் என்று கூறி , மறுபடியும் கிளியை அழைத்து ஒரு சீட்டை எடுக்கச் சொன்னார்.


                    கிளி மறுபடியும் அதே சீட்டை எடுத்தது.( கிளி சீட்டை எடுத்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு குறிப்பிட்ட சீட்டை எடுத்ததும்  ஜோசியர் விரலால் கிளியின் அருகில் ஒரு சப்தத்தை ஏற்படுத்தினார். உடனே கிளி சீட்டு எடுப்பதை நிறுத்தி விட்டு , வாயிலிருந்த சீட்டை அவரிடம் கொடுத்தது.). 


                         அந்த சீட்டைப் பார்த்ததும் ஜோசியர் "கண்டிப்பாக பரிகாரம் செய்தே ஆக வேண்டும்!" இல்லை என்றால் உனக்கு திருமணம் தடைப் படும். சகல வித தீமைகளும் வந்து சேரும் என்றார்.   உடனே என் தம்பி "என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?" என்று அவரிடம் கேட்டான். அதற்கு அவர் " என்னிடம் ஒரு  மந்திரித்த தகடு இருக்கிறது. அதை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்தால், எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்று கூறி, அந்த தகட்டைக் காட்டினார். நாங்களும் பயந்தவாறு , அந்தத் தகட்டைக் கேட்டோம். அதற்கு அவர் அதன் விலை முன்னூறு    ருபாய் என்றும் , இது தன்னைத் தவிர சில அரிய இடங்களில் மட்டுமே கிகைக்கும் என்றார். என் தம்பியும் என் மீது அக்கறை கொண்டவனாதலால், வீடு முழுவதும் சென்று பணத்தைத் தேடினான். கூடவே சேர்ந்து நானும் தேடினேன். பெரு முயற்சிக்குப் பிறகு ஒரு ஒட்டுப் போட்ட நூறு ருபாய் கையில் சிக்கியது.

            உடனே என் தம்பி அவரிடம், "அண்ணே ! எங்கட்ட அவ்ளோ பணம் இப்ப இல்ல. அப்பா அம்மா வெளில போயிருக்காங்க , ஒரு ஒட்டு போட்ட நூறு ரூவா தான் இருக்கு !!கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க வந்த உடனே வந்து வாங்கிக்குங்க !" என்றான். அதற்கு அவர், பரவாஇல்லை தம்பி! அந்த நூறு ரூபாயை மட்டும் குடுங்க . மிச்சத்தை வேறொரு நாள் வந்து வாங்கிக்கறேன்! என்றான்.

            அவன் நெளிந்த நெளிவில் இருந்து எனக்கு சந்தேகம் தோன்றியது. உடனே என் அப்பாவிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைக் கூறினேன். அவர் மறு முனையில் பலவாறு என்னைக் கடிந்தவாறு, "அவன் திருட்டுப் பையன் .உடனே அவனை வீட்டை விட்டு விரட்டு !". என்றார்.

                 பின்பு, ஜோசியரை "ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகு வீட்டை விட்டு அகற்றினோம்.!""